Monday, April 21, 2014

ஏற்காடு

ஏற்காடு - Yercaud, Jewel of South India.

ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு.  கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 


இன்றுவரை தமிழகமே அதிக வெப்பத்துடன் காணப்பட்டாலும் ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை என்பது ஏற்காட்டின் தனிச் சிறப்பு.


ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவது போல ஏற்காடு தென்னிந்தியாவின் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கப்படுகிறது. இனி ஏற்காட்டில் காணவேண்டிய இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். 


Yercaud Lake:
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யவேண்டுமா? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஏற்காடு ஏரி. Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. 




ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.  


Lady's seat:
ஏற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.  வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.






Killiyur Water falls:
ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.  மழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது.  




Pagoda point:
இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்  இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.  ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. 




Bear's cave:
தனியாருக்குச் சொந்தமான இந்தக் குகை, கரடிகள் தங்கிய இடம்.  இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை உண்டு என்று நம்பப்படுகிறது ஆனால் உறுதியாக கூறமுடியாது. யாரேனும் உள்ளே சென்று பார்த்தால் தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.




Servarayan temple:
சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம்.  இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.




National Orchidarium, Botanical Garden:
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன.  இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 






ஏற்காடு செல்ல ஏற்ற நேரம் - ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.


விழாக்கள்: இங்கு மே மாதம் ஏழு நாட்கள் கோடைத் திருவிழா நடைபெறும். 


எப்படி செல்வது?
1) ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - சேலம் 16 கி.மீ தொலைவில்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 125 கி.மீ தொலைவில்.

No comments:

Post a Comment