Friday, May 9, 2014

Ruthratcham


 ருத்ராட்ச முகங்களின் சிறப்புகள்

ருத்ரனின் அம்சமான ருத்ராட்சம், சிவபெரு மானின் திருநயனங்களில் இருந்து வீழ்ந்த விழிநீரின் அருள் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் இலைகளைப் போன்று உள்ள ஒரு வகை மரத்தின், பசுமை கலந்த நீல நிறம் கொண்ட பழங்களின் உள்ளேயுள்ள விதைகளே ருத்ராட்சமாகும்.

நமது நாட்டில் வங்காளக் காடுகள், அசாம் காடுகள், ஹரித்வார், டேராடூன், நேபாளம், மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மைசூர் காடுகள், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ருத்ராட்சம் கிடைக்கிறது. இவை வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் இருந்தாலும், நாம் பரவலாகப் பார்க்கும் பழுப்பு நிறமானவையே (கருப்பின் மங்கிய வடிவம்) அதிகமாகக் கிடைக்கின்றன.

ஒரு மரத்தின் விதை வடிவம் என்பதையும் தாண்டி, அதில் பலவித சூட்சுமமான தெய்வீக சக்திகள் உள்ளன என்பதை பலர் தமது சுய அனுபவங்களிலும், பலர் தமது அறிவியல்பூர்வமான ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொருவிதமான பயனைத் தரத்தக்க சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன.

* அதில் ஏக முகம் எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக முகருத்ராட்சம்.

ஒரு உண்மையான ஏக முக ருத்ராட்சத்தை ஒரு படி அளவுள்ள ஏதாவதொரு தானியத்தின் அடியில் இட்டால், அது தானாகவே மேலே கிளம்பி வரக்கூடிய தன்மை பெற்றதாகும் என்று ஒரு ஆச்சரியமான தகவலை பழைய நூல் ஒன்று தெரிவிக்கிறது. ஒரு முக ருத்ராட்சம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரியது;

சகலவிதமான பித்ரு தோஷங்களையும் விலக்கி நல்வாழ் வளிக்கும் தன்மை பெற்றது. எல்லா நலன்களையும் தரக்கூடிய இந்த ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். சிவ மஹா புராணத்தில் ஒவ்வொரு வகை ருத்ராட்சங்களுக்கும் உரிய பீஜ மந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இரு முகங்களைக் கொண்ட, த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கு உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவு முறைகளுக்குள் நல்ல, சுமூகமான போக்கு நிலவும். இது நவக் கிரகங்களில் சந்திரனுக்கு உரியதாகும். மனோகாரகனான, மாத்ருகாரகனான சந்திர பலம் ஒரு ஜாதகத்தில் மிக அவசியமானதாகும்.

மனம் எப்பொழுதும் சீரான நிலையிலிருக்க ஸ்திரத்தன்மை முக்கியம். மற்றவர்களோடு பழகும் தன்மையில் மேம்பட்டிருக்க வேண்டுமாயின் சந்திரனின் பலம் அவசியமாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில் இருமுக ருத்ராட்சம் சிறப்பு வாய்ந்தது.

ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்து, மனோரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரமானது, ஓம் நம என்பதாகும்.

* மூன்று முகங்களைக்கொண்ட திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரியது. விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிக்க விரும்புவோர் மும்முக ருத்ராட்சத்தை அணியலாம். இது மனதில் தைரியத்தையும், துணிவையும், தருவதோடு உடலியக்கங்களின் துடிப்பான செயல்திறனையும் மேம்படுத்தும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் ஆகியோரது சுய வளர்ச்சியையும் உயர்த்தும். சுறுசுறுப்பு குறைந்தவர்களும் இதையணிந்து பயன் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் க்லிம் நம என்பதாகும்.

* நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக ருத்ராட்சம், பிரம்மாவின் அம்சம் கொண்டது. நவக்கிரகங்களில் புதனுடைய அம்சத்தைப் பெற்றது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். திக்குவாய் உள்ளவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிவதால், அவர்களது பேச்சுத்திறன் நிச்சயம் மேம்படும்.

கணிப்பொறித்துறையினர், மின்னியல் கருவிகள் சம்பந்தமான தொழில், அறிவியல் ஆய்வு சம்பந்தமான துறை, ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் இதை அணிவதால் நற்பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் ஹ்ரீம் நம.

* பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக (ஐந்து முகம்) ருத்ராட்சம், சிவ அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் குரு பகவானின் அம்சம் பெற்றதோடு, ஆழ்ந்த கல்வியறிவையும், மனதின் சமநிலையையும் தரும் தன்மையைப் கொண்டது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணம், ரத்த அழுத்தம் சம்பந்தமான உடற்பிணிகளையும் நீக்கக்கூடிய தன்மையையும் பெற்றதாக இந்த ருத்ராட்சம் விளங்குகிறது. நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று அமைந்து காப்பாற்றக்கூடியது.

இது நமது மனோ உடலின் உயிரியல் தன்மையை ஒளிரவைக்கக்கூடிய காந்த ஆற்றலை உள்ளடக்கியதாகும். இதற்கான பீஜாட்சரமானது, ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* சண்முக ருத்ராட்சம் எனப்படும் ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சம் கந்தக்கடவுளின் அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் சுக்ரனின் அம்சம் பெற்றது. கலியுகம் சார்ந்த உலக வாழ்க்கை நலன்களைத்தரும் வல்லமை கொண்டது. உடலில் ஜனனேந்திரியங்களின் செயல்பாட்டில் சம நிலையை உண்டாக்கி மனதின் வசீகர சக்தியை மேம்படுத்தக்கூடியது.

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான போக்கு நிலவச் செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெகுஜனத் தொடர்பு சாதனங்களில், தொழில் ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இதை அணிந்து ஜனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களை அடையலாம். இதற்கான மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம ஆகும்.

* சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது. நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது.

நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது. ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ்டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும்.

இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது. நீண்ட காலமாகத் தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹம் நம என்பதாகும்.

* விநாயகப் பெருமானின் அம்சம் கொண்ட அஷ்டமுக ருத்ராட்சமானது எண்முக மணியாகும். நவக்கிரகங்களில் இது ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான, அலையியக்கக் காந்த மண்டல சுழற்சியினை உடையது.

ருத்ராட்சங்களிலேயே மிக, மிகக் கவனமாகச் சோதனை செய்த பின்பே இதை வீட்டில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். உடலில் அணிவது பெரும்பாலும், இந்த மணியின் விஷயத்தில் தவிர்க்கப்படுகிறது. உளவியல் சிக்கல்களுக்குட்பட்டவர்களின் மனநலம் மேம்பட ஒரு குறிப்பிட்ட கால அளவிலும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் இதை பூஜை செய்து வருவது மிக, மிக நல்லதாகும்.

இந்த மணிகள் வாழ்வியலின் நூதனமான அனுபவங்களைத் தந்து, மனோரீதியான தனிப்பட்ட விளைவுகளால், ஒருவரை அறிவியலின் அடிப்படைகளுக்குட்படாத புதிரான விளைவுகளுக்கு உள்ளாக்கக்கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப் பெற்றவையாகும். இந்த மணிக்குரிய மந்திரமானது ஓம் ஹம் நம என்பதாகும்.

* அன்னை பராசக்தியான ஆத்யா சக்தியின் அம்சம் கொண்டது நவமுக (ஒன்பது முகம்) ருத்ராட்சம். நவக்கிரகங்களில் கேதுவுக்குரியது. இதைப் பெரும்பாலும் சாக்த முறையிலான சக்தி சாதனையின் நெறி நிற்போர், தமது சாதனையின் பூர்த்திக்காக விரும்பி அணிவர்.

இதை அணிந்தால் பொறுமையும், நிதானமும் மனதில் நிலைத்து நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். மேலும், பிற மொழிகளில் நிபுணத்துவம் பெறவும், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கும் இந்த மணி பெரிதும் உறுதுணை புரிகிறது.

கேது கிரகத்தின் கெடுபலன்களான கீழே விழுந்து அடிபடுதல், கடும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட கனவுகள், புரியாத உடல் நிலைக் கோளாறுகள் ஆகிய சங்கடங்களைச் சரியாக்கும் தன்மையை உடையது இந்த ருத்ராட்சம். இதற்கான மந்திரம், ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* தசமுக (பத்து முகம்) ருத்ராட்சமானது மகாவிஷ்ணுவின் அம் சம் பொருந்தியது. தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். இந்த மணி ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பிக்கை. ஏகாதச ருத்ராட்சமானது பதினோரு முகங்களைக் கொண்டதாகும்.

ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் பெற்ற இந்த மணி, மனதின் ஆற்றலைப் பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரிய விரதத்தில் நிலைபெற விரும்புவோர் இதனையணிந்து நற்பயன் பெறலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் ஹம் நம என்பதாகும்.

* துவாதச ருத்ராட்சம் எனப்படும் பன்னிருமுக ருத்ராட் சம், சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மிக பலம் வேண்டுவோர் இம்மணியை அணியலாம். இதன் மந்திரமானது ஓம் க்ரௌம் ஷெளம் ரௌம் நம. 

No comments:

Post a Comment